இயற்பியலுக்கான யூரி மில்னர் பரிசுக்கு இந்திய விஞ்ஞானி தேர்வு: ஒரே நாளில் கோடீஸ்வரர்

ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் யூரி மில்னர்(50). அவர் கடந்த 3 ஆண்டுகளில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்களில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். அவர் ரூ.66,000 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவருக்கு ரூ.5,500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ரஷ்ய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த அவர் பட்டம் பெறாமலேயே வெளியேறினார்.
இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் சிறந்த இயற்பியல் வி்ஞ்ஞானிகளுக்கு பரிசு வழங்க முடி்வு செய்தார். யூரி மில்னர் பன்டமென்ட்டல் பிசிக்ஸ் பரிசு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பரிசு இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கான பரிசு பெறும் விஞ்ஞானிகளை மில்னரே தேர்வு செய்துள்ளார். ரூ.16.7 கோடி ரொக்கம் அடங்கிய அந்த பரிசுக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் அலகாபாத்தில் உள்ள ஹரிஷ் சந்திரா ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணிபுரியும் இயற்பியல் விஞ்ஞானி அசோகே சென்னும் ஒருவர்.
நோபல் பரிசுத் தொகையை விட அதிகத் தொகை கொண்ட இந்த பரிசை பெறும் சென் கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்துவிட்டு 1976ல் ஐஐடி கான்பூரில் படிக்கச் சென்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் இந்தியா திரும்பும் முன்பு பெர்மிலேப் மற்றும் ஸ்டான்போர்ட்டில் பணிபுரிந்தார். கடந்த 1994ம் ஆண்டு எஸ்.எஸ். பட்நாகர் விருது மற்றும் 2001ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். முன்னதாக 1995ம் ஆண்டில் இந்திய தேசிய அறிவியல் அகாடமிக்கும், 1998ல் ராயல் சொசைட்டி ஆப் லண்டனுக்கும் உறுப்பினராகத் தேர்வானார்.












Click it and Unblock the Notifications