ரஞ்சிதாவை நித்யானந்தா கைலாய யாத்திரைக்கு அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது: ஆதீனம்
மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா கடந்த 27ம் தேதி கைலாய யாத்திரைக்கு புறப்பட்டார். இந் நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்தில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்டை ஏஜெண்டு ஒருவரிடமிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட்டுகளை முடக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்மை பரிசோதனைக்காக கர்நாடக மருத்துவமனையில் ஆஜராக வேண்டிய நிலையில் நித்யானந்தா வெளிநாட்டுத் தப்பியோட திட்டமிட்டிருந்ததாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.
இந் நிலையில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அளித்துள்ள ஒரு பேட்டியில், டெல்லியில் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உள்பட 32 பேரின் பாஸ்போர்ட்கள் முடக்கம் செய்யும் நிலையில் இருப்பது குறித்து மனவேதனைப்படுகிறேன்.
நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா கைலாய யாத்திரைக்கு செல்வது குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. நித்யானந்தாவின் சீடர்களும் இதுபற்றி தெரிவிக்கவில்லை. முறைப்படி என்னிடம் நித்யானந்தா தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் தெரிவிக்கவில்லை.
நித்யானந்தாவுக்கு ஆள்பலம் இருக்கிறது. அவர் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை மீட்டு தருவார் என்ற நம்பிக்கை காரணமாகவும், நல்ல நோக்கத்திற்காகவும்தான் இளைய ஆதீனமான நியமித்தேன் என்று கூறியுள்ளார் ஆதீனம்.