ராகுல் காந்தியை துணைப் பிரதமராக்க சோனியாவிடம் தமிழக காங்கிரஸ் கோரிக்கை
ஆம்பூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட இளங்கோவன் நிருபர்களிடம் பேசுகையில்,
ராகுல் காந்தியை துணைப் பிரதமராகவும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராகவும் பதவியில் அமர்த்த வேண்டுமென தமிழக காங்கிரசார் விரைவில் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சுற்றுபயணம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாகத் தெரியவில்லை. திமுக தலைவர் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாடு தேவையில்லாதது.
லோக்பால் மசோதாவை சிலர் தங்கள் விருப்பம் போல் கொண்டு வரவேண்டுமென்பது சிறுபிள்ளைத் தனமானது. அன்னா ஹசாரே அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். அவர்கள் மக்கள் நம்பிக்கையை பெற்று எந்த சட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்க கூடாது என்பது தவறானது. இங்கு இல்லையென்றால் வேறு நாட்டிற்கு சென்று பயிற்சி எடுக்க போகிறார்கள் என்றார்.