சென்னை காசி தியேட்டர் பெண் படுகொலை: இரு ஊழியர்கள் கைது
சென்னை : சென்னை கே.கே. நகரில் உள்ள காசி திரையரங்கில் வேலை செய்த பெண் தொழிலாளியை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பார்வதி (வயது 55) ஜாபர்கான் பேட்டை, ஆர்வி.நகரில் மகன் முருகனுடன் வசித்து வந்தார். கே.கே.நகர் காசி சினிமா தியேட்டரில் கடந்த ஒரு வருடமாக துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தநிலையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் தியேட்டரின் மொட்டை மாடிக்கு எலக்ட்ரிசியன் சென்றபோது தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே எலக்ட்ரீசியன் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தார். அங்கு பார்வதி தண்ணீர் தொட்டி தண்ணீருக்குள் பிணமாக கிடந்தார். உடனடியாக தியேட்டர் உரிமையாளரிடம் எலக்ட்ரீசியன் தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் போலீசாரை வரவழைத்தனர்.
சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பார்வதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. கொலை செய்து பிணத்தை தண்ணீர் தொட்டிக்குள் வீசிய மர்மநபர்கள் பார்வதியின் காதில் இருந்த நகைகளை திருடிச்சென்றுள்ளனர். பார்வதியை கொன்ற கொலையாளிகள் அவருக்கு நன்கு தெரிந்த நபர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அதே திரையரங்கில் பணியாற்றி வந்த யோகு மற்றும் ராஜூவை காவல்துறையினர் விசாரித்ததில், தாங்கள் பணி செய்யாமல் இருப்பதை பார்வதி கண்டித்ததால் தாங்கள்தான் அவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொலை நடந்த காசி தியேட்டரில் மிரட்டல்' படம் வெளியிடப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தை அடுத்து மாலை 6 மணிக்காட்சியும், இரவுக்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ரிசர்வ் செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தோடும், பதற்றத்தோடும் திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications