கர்நாடகத்தைப் போல தமிழகமும் தொல்லியல் துறைக்கு கடிவாளம் போட வேண்டும்: வைகோ
சென்னை: தமிழக மக்களை அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட மக்களை வதைக்கும் தொல்லியல் துறைக்கு தமிழக அரசு கடிவாளம் போட வேண்டும் என்று மதிமுக பொதுச் சொயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பல்லவர்களின் கலைநகராம் மாமல்லபுரத்து மக்கள், மத்திய தொல்லியல் துறையின் கடுமையான சட்டங்களால் வாழ்வு உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் இழந்து நிற்கின்றனர். எனவே, தொடர் போராட்டங்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர். கடந்த 31.07.2012 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு 144 தடை உத்தரவு போடுகின்ற அளவுக்கு மக்களின் கோபம் போராட்ட வடிவம் பெற்றுள்ளது.
இந்நிலையில் மக்களின் குறைகளை அறிந்துகொள்ள சென்னை வந்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர், பாதிப்புக்கு உள்ளான மக்களைச் சந்திக்காமலும், தொல்லியல் துறை கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலும், நடன நிகழ்ச்சியைக் கண்டு ரசித்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இவர்கள்தாம் நீரோ மன்னனின் வாரிசுகளாகத் திகழ்கிறார்கள்.
‘மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலை ஏன் கையகப்படுத்துகிறீர்கள்?' என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது' என்று கூறி உள்ளார். அப்படி என்றால் கோயிலைக் கையகப்படுத்த 20.5.2012 அன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தது, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளின் தன்னிச்சையான எதேச்சதிகார நடவடிக்கையா? மக்களின் கருத்தை அறியாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குத் தெரிவிக்காமல், ஸ்தலசயனப் பெருமாள் கோயிலைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மத்திய தொல்லியல் துறை உடனடியாக கைவிட வேண்டும். இல்லை என்றால், ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய தொல்லியல் துறையே பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சுமார் 450 இடங்களை மத்திய தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சற்று ஏறக்குறையாக 50,000 ஏக்கர் நிலப்பரப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்ளே சென்றுவிடும். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 156 இடங்களை தேர்வு செய்து உள்ளனர். இதில் காஞ்சிபுரம், மாமல்லபுரம், உத்திரமேரூர், திருப்போரூர், பல்லவபுரம், திருநீர்மலை, சதுரங்கபட்டினம், தாம்பரம், திரிசூலம், திருவிடந்தை, திருமுக்கூடல், மணிமங்கலம், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை போன்ற பெரிய மற்றும் சிறிய நகரங்கள் மத்திய தொல்லியல் துறையால் குறிவைக்கப்பட்டுள்ளது.
இப்படியே போனால் சிறிது காலத்தில் காஞ்சிபுரம் மாவட்டமே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உள்ளே சென்றுவிடும். வரும் முன் காத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த ஜூலை மாதம், மேற்குத் தொடர்ச்சி மலையை தொல்லியல் துறை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு சட்டமன்றத்தைக் கூட்டி, கையகப்படுத்தக் கூடாது என்று எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதுபோல, தமிழக அரசும் மத்திய தொல்லியல் துறைக்குக் கடிவாளம் போட வேண்டும்.
நமது பாரம்பரிய அடையாளங்களைக் காப்பதில் நமக்கு அக்கறை இல்லாதது போன்றும், இவர்கள் அதற்காகவே அவாதரம் எடுத்தவர்களைப் போன்றும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மத்திய தொல்லியல் துறை உருவாக்கப்படுவதற்கு முன்பு கண்ணை இமை காப்பது போன்று பாதுகாத்து வந்தவர்கள் அந்ததந்தப் பகுதி மக்களே.
தமிழக அரசு மத்திய தொல்லியல் துறையின் தவறான கட்டுப்பாட்டால் புதிய வீடு கட்டவும், புதிய மின் இணைப்பு கொடுப்பதை இரண்டு ஆண்டு காலமாக ஆட்சேபணை செய்து நிறுத்தி வைத்து இருப்பதைத் தளர்த்தி, புதிய வீடு கட்டவும், புதிய மின் இணைப்பு வழங்கவும், பன்னெடுங்காலமாக கிராம நத்தத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மத்திய தொல்லியல் துறையின் தொல்லைக்கு உள்ளான ஏனைய பகுதி மக்களும், மத்திய தொல்லியல் துறையின் நடவடிக்கைகளால் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, வீடுகள் இடிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக மாறுவதற்கு முன்பு கிளர்ந்து எழுந்து போராட வேண்டும். பேராபத்து வருமுன் காத்திடுங்கள்.
மத்திய தொல்லியல் துறையின் தொல்லைகளை எதிர்த்து, மல்லையின் காவலர்களாகப் போராடி வருகின்ற மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக்குழுவினர் முன்னெடுக்கும் போராட்டம் வெற்றி பெற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் உறுதுணையாக நிற்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications