சென்னையில் நண்பரால் ரூ1 லட்சம் கேட்டு கடத்தபப்ட்ட குழந்தை பாதுகாப்பாக மீட்பு
சென்னை: சென்னையில் ரூ1 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. குழந்தையைக் கடத்த அலாவுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த டெய்லர் முருகனுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி குழந்தை பாவனாவுக்கு 4 வயது. கடந்த ஞாயிறன்று அப்பகுதி கோவில் திருவிழாவில் நடனமாடினார். அதன் பினன்ர் அவரைக் காணவில்லை. குழந்தையை அப்பகுதி முழுவதும் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தையை தாம் கடத்தி வைத்திருப்பதாகவும் ஆந்திர மாநில எல்லையான சூலூர்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்து ரூ1 லட்சம் கொடுத்து குழந்தையை மீட்டுக் கொள்ளுமாறும் முருகனின் நண்பரான அலாவுதீன் என்பவர் செல்போனில் முருகனை மிரட்டியுள்ளார். இத்தகவலும் போலீசுக்குத் தெரிவிக்கப்பட்டத்.
இதையடுத்து அலாவுதீனின் செல்போன் கண்காணிக்கப்பட்டதில் சூலூர்பேட்டை சுற்றுவட்டாரத்தை காண்பித்தது. அப்பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சூலூர்பேட்டை ரயில்நிலையத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு ரயில் நிலையத்தில் அலாவுதீன் மட்டும் சுற்றிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது. அவனை போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓட முயற்சித்தான். இறுதியில் போலீசார் அவனை பிடித்தனர். ஆனால் அவனிடம் குழந்தை இல்லாததால் அதுபற்றியும் விசாரிக்கபப்ட்டது. அப்போது தமது கூட்டாளி பப்புலு அருகே உள்ள புதர் ஒன்றில் குழந்தையுடன் மறைந்து இருப்பதாகக் கூறினான். பின்னர் பப்புலுவை போலீசார் சுற்றி வளைக்க முற்பட்டனர். ஆனால் அவன் குழந்தையைவிட்டுவிட்டு தப்பியோடிவிட்டான்.
அலாவுதீனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ1 லட்சம் கொடுத்து முருகன் குழந்தையை மீட்காவிட்டால் பீகாரில் அந்த குழந்தையை விற்றிருப்பேன் என்று கூறியிருந்தது போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பியோடிய அலாவுதீன் கூட்டாளி பப்புலுவை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications