உறுப்பினர்கள் அமளி: லோக்சபா 2வது முறையாக ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இரு அவைகளும் கூடியவுடனேயே அஸ்ஸாம் வன்முறை குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடின. அப்போது லோக்சபாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அஸ்ஸாம் வன்முறை குறித்த விவாதத்தை துவங்கினார். கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முறைகேடானது என்றார்.
இதைக் கேட்டவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுப்பாகி அத்வானியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுமாறு காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார். இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தனது கருத்தை வாபஸ் பெறுமாறு அத்வானியை சபாநாயகர் மீரா குமார் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து அத்வானி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
ஆனால் அமளியில் ஈடுபட்டவர்கள் சாந்தம் அடையாததையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications