டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கப்படுமா?: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
சென்னை: டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் ஆர். சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக தலைவர் கருணாநிதி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்தபோவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, சுதந்திரத்துக்காக போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மறைமுகமாக உதவிகள் செய்தார்.
இவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது இவர்கள் வாய் திறக்கவில்லை. நார்வே நாட்டைச் சேர்ந்த அமைதி தூதுக்குழுவினர், இலங்கை போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியபோது கருணாநிதி தரப்பிலோ, மத்திய அரசு தரப்பிலோ ஒருவர் கூட அந்த இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் இப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்துகிறார். இந்த மாநாட்டினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த மாநாட்டுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது வரும். மேலும் இந்த மாநாட்டினால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த மாநாடு நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் 6.8.2012 அன்று மனு கொடுத்தேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications