அமெரிக்க மசூதியில் தீ விபத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் விஸ்கான்சின் பகுதியில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற, அடுத்த நாளே மிசெளரி பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அமெரிக்காவில் உள்ள மிசெளரி பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 6ம் தேதி திடீரென தீவிபத்து ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்தின் போது மசூதியில் யாரும் இருக்கவில்லை. இதனால் காயம் மற்றும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து எப்.பி.ஐ. புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து எப்.பி.ஐ நிறுவன பொறுப்பு அதிகாரி மைக்கேல் காஸ்டல் கூறியதாவது,
தீவிபத்து குறித்து விசாரணையின் முதல் கட்டத்தில் உள்ளோம். இதற்கான காரணம் குறித்து விசாரணை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இயற்கையான முறையில் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் விசாரணையில் தெரியவரும்.
வழிப்பாட்டு தலங்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தும் வகையில், யாராவது தீவிபத்தை ஏற்படுத்தி இருந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கு, பாதுகாப்பு அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
மசூதியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் உள்ள மசூதிகள் மற்றும் மற்ற வழிப்பாட்டு தலங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க-இஸ்லாமிய உறவு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக இதே மசூதியில் கடந்த மாதம்(ஜூலை) 4ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. அது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 ஆயிரம் டாலர் சன்மானம் வழங்குவதாக எப்.பி.ஐ தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற தீவிபத்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று எப்.பி.ஐ அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் விஸ்கான்சின் பகுதியில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளே மசூலியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications