பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்: பாஜகவுக்கு நிதிஷ்குமார் நெருக்கடி
பாட்னா: பிரதமர் வேட்பாளரை பாஜக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் நெருக்கடி கொடுத்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சி ஐக்கிய ஜனதா தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவரும், பிகார் மாநில முதல்வருமான நிதீஷ்குமார் பிரதமர் பதவிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்மொழியக் கூடாது என்று ஏற்கனவே பாஜகவுக்கு நிபந்தனை விதித்துள்ளார்.
இதனால் பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் பாஜக அமைதி காத்து வருகிறது. இந் நிலையில் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்த கல்லை வீசியுள்ளார் நிதிஷ்குமார்.
நிருபர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சி அல்லது கூட்டணியால் பிரதமர் வேட்பாளர் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், மக்கள் ஆலோசித்து சரியான முடிவெடுக்க உதவியாக இருக்கும். அந்தக் கூட்டணியில் உள்ள பெரிய கட்சி தலைமையில் நிலையான அரசு மத்தியில் அமையும்.
இதற்கு உதாரணம், கடந்த முறை ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இப்போது இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைக் கூறலாம்.
இதனால் பிரதமர் வேட்பாளரை பாஜக முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் கூட்டணி ஆட்சி தான் வரப் போகிறது என்றார் நிதிஷ்குமார்.
பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவீர்களா என்று கேட்டதற்கு, நான் ஒருபோதும் அந்தப் பதவிக்கு ஆசைப்படவில்லை, போட்டியிடவும் போவதில்லை. எனது கனவில் கூட அத்தகைய ஆசை ஏற்பட்டதில்லை என்றார்.
நீங்கள் நரேந்திர மோடியை எதிர்ப்பதே, உங்களை மதச்சார்பற்றவர் என்று காட்டிக் கொள்ளத்தான் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, அது பால் தாக்கரேவின் சொந்தமான கற்பனை என்றார்.