கொடநாட்டில் முதல்வர் மாதக்கணக்கில் ஓய்வெடுத்தால் அது பற்றி பேசக்கூடாதா?- ஸ்டாலின்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்வர் ஜெயலலிதா என் மீது தொடுத்துள்ள வழக்கில் நான் பேசியவை அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறியிருக்கிறார். நான் கூறியது ஆதாரமற்றவையாக இருந்தால் அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டியதுதான் முதல்வர் பணியே தவிர, எதற்கு எடுத்தாலும் வழக்கு தொடர்வது என்ன நியாயம்? நீதிமன்றங்களுக்கு இந்த ஆட்சியில் வேறு வேலை இல்லை என்று முதல்வர் நினைக்கிறாரா?
அரசியில் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசினால் அதனை பத்திரிக்கைகாரர்கள் வெளியிடத்தான் செய்வார்கள்.அதற்காக அந்தப் பத்திரிக்கைகள் மீதெல்லாம் வழக்கு என்றால் இப்போது நெருக்கடி நிலையா நீடிக்கிறது? கொடநாட்டில் ஒரு முதல்வர் மாதக் கணக்கில் ஓய்வெடுத்தால் மக்கள் பிரதிநிதிகள் அதைப் பற்றிப் பேசக்கூடாதா?
சென்னையில் காலரா இல்லை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று கேட்டேன். அது தவறு என்றால் அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். அதற்குப் பதிலாக வழக்கு என்றால் யாரை மிரட்ட முதல்வர் நினைக்கிறார்? வழக்கைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.