டெசோ மாநாட்டில் திமுக தலைவர்களின் படங்களுக்கு திமுகவே 'தடா'!
சென்னை: சென்னையில் நடக்கும் டெசோ மாநாட்டுக்கு கட்சித் தலைவர்களின் படங்களையோ, கட்சிக் கொடிகளையோ கொண்டு வரக் கூடாது என்று திமுக உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் வரும் 12-8-2012 அன்று நடைபெற உள்ள ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு (டெசோ) மாநாட்டில் கலந்து கொள்ள வரும் திமுகவினரோ அல்லது தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களோ கட்சிக் கொடிகளையோ, தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையோ கட்டாயமாகக் கொண்டு வரக்கூடாது என்று கண்டிப்பாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாநாட்டிலும் வேறெந்தக் கட்சிகள் பற்றிய ஒலி முழக்கங்களோ எழுப்பிடக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு ஈழத் தமிழர் பாதுகாப்பு கழகம் வாழ்த்து:
இந்த மாநாட்டையொட்டி ஈழத் தமிழர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சந்திரஹாசன் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பேரணிகள், ஆய்வரங்குகள், மாநாடுகள் என தமிழ் இனத்தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் தாங்கள். இடம், பொருள், ஏவல், இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர்.
ஓரணி திரளாது, ஈழத்தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் எப்படி ஏற்படும் என்று நாளும் ஆதங்கப்படுபவர்.
அதனால்தான் உண்மை உணராது, தங்களை வெறுத்து நிற்கும் ஈழத் தமிழர்களைக்கூட வையாது, வாழ்வாங்கு வாழும் தங்களை நாம் அறிவோம். எமது நல்வாழ்வுக்காய் ஏங்கும் உங்கள் எண்ணங்களையும் நாமறிவோம்.
கட்சியின் தலைவர், அரசியல் வழிகாட்டி, பல்வேறு இனங்கள் வாழும் கூட்டாட்சி நாட்டின் குடிமகன் என்ற பல்வேறு கயிறுகளால் கட்டப்பட்டு நிற்கும்போதும், இன உணர்வால் ஈழத்தமிழர் மீது தாங்கள் காட்டும் அன்பே, அவ்வப்போது தங்களுக்கெதிராக திரும்பி, அம்பெனக் குத்தும்போதும் வலி பொறுத்து எம்மை அரவணைக்கும் செயலுக்குக் கோடி நன்றிகள்.
ஈழ மண்ணின் ரத்தக் களரிக்கும், ஈழத் தமிழர்களின் விரும்பத்தகாத உயிரிழப்புகளுக்கும் முடிவுகட்டி அவரது வாழ்வின் அமைதிக்கும் வளமான எதிர்காலத்திற்கும் பொருத்தமான வழியைக்காட்ட வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் விருப்பம்.
குவலயம் முழுக்க பரந்துவாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடாக உருவெடுத்து நிற்கும் டெசோ மாநாடு மகத்தான வெற்றியுடன் உரிய இலக்கை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.