தாய்லாந்து-துபாய் விமானத்தில் பயணிக்கு நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து துபாய்க்கு 240 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை வான் எல்லையில் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அதில் பயணித்த ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மூஸா அனீஸ் (51) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இது குறித்து விமானப் பணிப் பெண்கள் விமானிக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதித்தது. விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் குழு, விமானத்தில் ஏறி அந்தப் பயணிக்கு முதலுதவி சிகிச்சை தந்தனர்.
அவரது உடல் நிலை மிக மோசமாக இருந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.
ஆனால் மூஸாவிடமும் அவரது மனைவி ஜிஜிசோபியிடமும் துபாய் செல்லவே விசா இருந்ததால் சென்னையில் சட்டப்படி தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள், இருவருக்கும் தற்காலிக இந்திய விசா அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மூஸா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் 238 பயணிகளுடன் விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது.