சென்னையில் பரவலான மழை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் வறண்டு வருகிறது. கடும் வெப்பம் காரணமாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை செய்தது. இதனால் கோடை வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கதில் 3.6 மி.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 13.6 மி.மீட்டரும் மழை பெய்தது. மேலும் தாம்பரம், சோழிங்கநல்லுர், திருவொற்றியூர், சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, ஒசூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. வெப்ப சலனம் காரணமாக மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.