ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும்: டெசோ ஆய்வரங்கில் கருணாநிதி

சென்னை அக்கார்டு ஹோட்டலில் காலை 10 மணிக்கு தொடக்கிய இந்த ஆய்வரங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். லோக்ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் விக்கிரமபாகு, ஆம்னஷ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கனிமொழி எம்.பி மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றனர்.
ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில், ஈழத் தமிழர்களுக்கு திமுக தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து திமுக செயல்படுவது என்பது வரலாற்று உண்மை. ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் ஈழத் தமிழர் பிரச்சனைக்காக திமுக 2 முறை ஆட்சியை இழந்ததையும் திமுக நடத்திய போராட்டங்களையும் தமது உரையில் கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்றைய ஆய்வரங்களில் மாலை மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்களை நிறைவேற்ற இன்றைய ஆய்வரங்கம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications