டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு: கொழும்பில் கருணாநிதி, சம்பந்தன் உருவபொம்மைகள் எரிப்பு
கொழும்பில் இந்திய தூதரின் இல்லத்துக்கு முன்பாக "தேசிய இயக்கங்களின் ஒன்றியம்" என்ற பெயரில் சிங்களவர்கள் நேற்று மாலை ஒன்று திரண்டனர். அவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழீழத்துக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த இனவெறி போராட்டதுக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசிங்க தலைமை வகித்து பேசியதாவது:
இலங்கை விவகாரங்களில் அநாகரிகமான முறையில் இந்தியா தலையிட்டு உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. டெசோவை கருணாநிதி மீண்டும் கூட்டி இலங்கையில் தமிழீழத்தை அமைக்கப் போவதாக கூறுகின்றார். இது அவர் காணும் பகல் கனவு ௭ன்பதை தமிழகமும் மத்திய அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
ரத்த வெறி பிடித்த கருணாநிதி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும் இரத்த வெறி பிடித்தவர்கள். இவர்களுக்கு தமிழீழம் வேண்டுமென்றால் இந்தியாவில் அமைத்துக் கொள்ளட்டும். இலங்கையில் அதற்கான அனுமதியை ஒருபோதும் வழங்க முடியாது. மத்திய அரசின் ஊக்குவிப்பிலேயே கருணாநிதி டெசோவை நடத்துகின்றார். பிரதமர் மன்மோகன்சிங் ஒன்றுமே தெரியாது போன்று நடிக்கின்றார்.
தனி ஈழமா? ரத்த ஆறும் ஓடும்
மீண்டும் இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதற்கு இந்தியா செயற்படக் கூடாது. உள்நாட்டு விவகாரங்களை ௭மது அரசு பார்த்துக் கொள்ளும். இந்தியா அந் நடவடிக்கையில் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது. தமிழர்களுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச நடவடிக்கை ௭டுக்க வேண்டும். ௭மது அரசியலமைப்புக்குள் பலவந்தமாக திணிக்கப்பட்ட இந்தியாவின் பிரிவினைவாத கொள்கைகளை முதலில் நீக்க வேண்டும் என்றார்.
உருவபொம்மை எரிப்பு
அதன் பின்னர் ஆண்களும் பெண்களுமாக ஒன்று திரண்ட சிங்களவர்கள், திமுக தலைவர் கருணாநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது உருவ பொம்மைகளை செருப்பால் அடித்தும் தீ வைத்துக் கொளுத்தியும் தங்களது இனவெறியை வெளிப்படுத்தினர்.