கொளத்தூர் மணி தலைமையில் புதிய அமைப்பாக "திராவிடர் விடுதலைக் கழகம்" உதயமானது
இந்த புதிய இயக்கம் தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கொளத்தூர் மணி கூறியதாவது:
பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள், கொள்கையை முன்னெடுப்பதிலும் இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் எழுந்த கருத்துவேறுபாட்டின் காரணமாக தனியே பிரிந்து வந்து திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பெரியாரின் அடிப்படை இலட்சியங்களான சாதி ஒழிந்த சமுதாயம் அமைக்க - பெரியார் வலியுறுத்திய கொள்கைகளுக்கு முன்னுரிமை தந்தும், தமிழர் இன ஒடுக்குமுறைகளுக்கும், பெண் விடுதலைக்கும், பகுத்தறிவுக் கொள்கைகளுக்கும்முனைப்பான இயக்கங்களை நடத்தும்.
‘திராவிடர் விடுதலைக் கழகம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்துக்க் நான் தலைவராக செயல்படுவேன். விடுதலை க. இராசேந்திரன் பொதுச்செயலாளராக செயல்படுவார்.
பெரியார் திராவிடர் கழகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெரும்பான்மையினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
டிசம்பர் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் இரண்டு நாள் மாநில மாநாடு மற்றும் "மனுசாஸ்த்திர எரிப்பு போராட்ட விளக்க மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1929 இல் செங்கல்பட்டில் பெரியார் கூட்டிய இரண்டுநாள் மாநாட்டில் - சுயமரியாதை இயக்க முதல் மாநாட்டில் - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நாளான பிப்பிரவரி 28 இல் தமிழ்நாடு முழுவதும் - சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் கூறுபடுத்தும் - மனுசாஸ்த்திரத்தைத் தடைசெய்யக்கோரி - மனு சாஸ்த்திர எரிப்புப் போராட்டம் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தோழர்களுக்குக் கொள்கைப்பயிற்சி வகுப்புகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் கொளத்தூர் மணி.