சுயநலத்திற்காக வீரப்பன் படத்தை பயன்படுத்தும் பாமக: முத்துலட்சுமி தாக்கு
விழுப்புரம்: பாமகவினர் தங்கள் சுயநலத்திற்காக எனது கணவரின் புகைப்படத்தை பிரசுரிக்கின்றனர் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மீது கர்நாடக அரசு தொடர்ந்த 5 வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டேன். ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிலும் நான் விடுவிக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது கணவர் காட்டில் புதைத்து வைத்துள்ள பணத்தை எடுத்து நான் கட்சி துவங்கப்போவதாக உளவுத் துறை புரளியை கிளப்புகிறது. மற்றவர்களிடம் இருந்து என்னை பிரிக்கவே இவ்வாறு செய்கின்றனர். நான் எந்த கட்சியிலும் சேரவும் மாட்டேன், புதிய கட்சியும் துவங்க மாட்டேன். எனது கணவரைக் கொன்று என்னை 5 ஆண்டுகள் சிறையி்ல் தள்ளினார்கள். அப்போது எந்த ஒரு அரசியல் கட்சியும் எனக்கு உதவவில்லை. எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் மட்டுமே உதவினர்.
அதனால் நான் என் மீதி காலத்தை மக்கள் பணி செய்து கழிக்க விரும்புகிறேன். எனது கணவர் வீரப்பனின் படத்தை பிரசுரிக்கக் கூடாது என்று பாமகவினரிடம் தெரிவித்துவிட்டேன். அவர்கள் எனது கணவர் படத்தை பிரசுரிப்பது அவர்களின் கட்சி வளர்ச்சிக்காகவும், சுயநலத்திற்காகவும் தான். ஆனாலும் அவரது படத்தை பயன்படுத்துகின்றனர். கேட்டால் சாதி அடிப்படையில் தொண்டர்கள் தான் அவரது படத்தை பிரசுரிக்கின்றனர் என்கின்றனர்.
இது தவிர எனது கணவரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் எடுத்துள்ளனர். அதை எதிர்த்து நான் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளேன். ஏதாவது விசேஷங்களுக்கு என்னை அழைக்க விரும்புபவர்களை போலீசார் மிரட்டி வருகின்றனர்.
எனது படத்தையும், எனது கணவரின் படத்தையும் பிரசுரிப்பது சட்டவிரோதமானது என்பது போன்று சித்தரி்க்கின்றனர். இதனால் யாரும் என்னிடம் நெருங்கிப் பழக யோசிக்கின்றனர். மக்களிடத்தில் நான் நெருங்காமல் போலீசார் பார்த்துக் கொள்கின்றனர். ஒரு வகையில் இதுவும் மனித உரிமை மீறலே என்றார்.