டெசோ மாநாட்டு தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து: இலங்கையின் சிங்கள அமைப்பு அலறல்
கொழும்பு: திமுக முன்னின்று நடத்திய டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறியுள்ளதாவது:
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துவிட முடியாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால் மகிந்த ராஜபக்ச அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.
தனி ஈழத்தை உருவாக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றும் "டெசோ'வில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஐ.நாவில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட ஈழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதைப் பார்க்கவேண்டும்.
இலங்கையின் இறையாண்மையில் தலையிடும் அதிகாரம் இந்தியாவிற்கு கிடையாது, காஷ்மீர் பிரச்சினையில் இலங்கை தலையிடுவதில்லை. இந்தியா அதற்கு அனுமதிப்பதுமில்லை. எனவே இலங்கையின் விவகாரங்களில் குறிப்பாக இந்தியா தலையிடக்கூடாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications