ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டி மனைவி, மகள் வெளிநாட்டுக்கு தப்பாமல் தடுக்க தீவிர வேட்டை
சென்னை: நில அபகரிப்பு மோசடி புகாருக்குள்ளாகி இருக்கும் கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் அவரது மகள் யாமினி இருவரும் தலைமறைவாக உள்ளதால் அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிடாமல் இருக்க விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை புறநகரில் போலி பட்டாக்கள் தயாரித்து நில அபகரிப்புகளில் ஈடுபட்டனர் என்பது சுப்புலட்சுமி மற்றும் யாமினி மீது புகார். இந்தப் புகாரைத் தொடர்ந்து ஓய்வு பெறும் நாளுக்கு முதல் நாள் துக்கையாண்டி திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் சென்னையைவிட்டு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் துக்கையாண்டியின் மனைவி மற்றும் யாமினி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியபோது அவர்கள் திடீரென தலைமறைவாகிவிட்டனர். இருவரையும் பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் இருவரும் சிக்கவில்லை.
இந்தநிலையில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ஒரு தகவலை அனுப்பி உள்ளனர். அதில் துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி, மகள் யாமினி இருவரும் வெளிநாடு சென்றால் தங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார்கள் என்ன?
மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா மற்றும் சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள் மீதான புகார்கள்.












Click it and Unblock the Notifications