முஸ்லிம்களுக்கு திமுக என்றுமே பக்கபலமாக இருக்கும்: இஃப்தார் நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
அடாத மழையிலும் விடாமல் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்தார் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது வாடிக்கையான ஒன்று. என்னை சிறப்பு விருந்தினர் என்று இனி அழைக்க வேண்டாம். நான் உங்கள் விருந்தினர். என்னை அழைக்காவிட்டாலும் இங்கு நான் வருவேன். இங்கே பேசிய அல்தாப், சிறுபான்மையின மக்களுக்கு திமுக ஆட்சி செய்த சாதனைகளை குறிப்பிட்டார்.
நபிகள் நாயகம் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தார். அது போல திமுக தலைவர் கருணாநிதி எத்தனையோ சோதனை, வேதனைகளை ஏற்று ஏழை, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். அவருக்கு என்றும் பக்கபலமாக இருப்போம் என்ற உணர்வோடு இங்கே வந்திருக்கிறீர்கள்.
நான் இங்கு வந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. வரவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். கோட்டைக்கு முதல்வர் வருவது இன்று ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது. அப்படிப்பட்ட காலம் இது.
நாங்கள் சிறுபான்மையின மக்களோடு என்றும் இருப்போம். கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு என்று சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைவர் கருணாநிதியும், பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கும், சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கும் திமுக என்றும் பக்கபலமாக இருக்கும்.
உங்கள் வாழ்வில் இரண்டற கலந்த இயக்கம் திமுக. அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் என்றார் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் டி.பி.எம்.மைதீன்கான், ரகுமான்கான், வசந்தி ஸ்டான்லி எம்.பி, திமுக தலைமை நிலையச் செயலாளர் சம்சுதீன், மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.கே.ஏ.அகமது அலி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாய்தா வாங்கிக் கொண்டு ஓடமாட்டேன்..:
இந் நிலையில் திமுக சார்பில் நடந்த ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா புதுவண்ணாரப்பேட்டையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதில் பங்கேற்று 2,100 ஏழைகளுக்கு வேட்டி-புடவை, அரிசி உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கி ஸ்டாலின் பேசுகையில், திமுகவினர் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. முதல்வரை அவதூறாகப் பேசியதாக என் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்குகளை கண்டு அஞ்சமாட்டோம். என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை நான் சந்திப்பேன். வாய்தா வாங்கிக் கொண்டு ஓடமாட்டேன்.
நாடு தற்போது மோசமான நிலையில் உள்ளது. நாட்டு மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பெண்கள் நினைத்ததை செய்யக் கூடியவர்கள். நம்மை தோற்கடித்தவர்கள் அவர்கள்தான். இப்போது தவறு செய்துவிட்டோம் என்று கவலைப்படுகிறார்கள்.
ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வோம். தமிழகம் முழுவதும் ஒரு வருடமாக சுற்றுப்பயணம் செய்தேன். எங்கும் பார்க்காத பெரும் கூட்டத்தை இங்கு காண்கிறேன் என்றார்.