நாளை சுதந்திர தினம்: உச்சகட்ட பாதுகாப்பில் போலீசார் தீவிரம்
நெல்லை: சுதந்திர தின விழாவையொட்டி ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் இன்று மாலை முதல் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.
மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். விழாவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தீவிரவாதிகளின் மிரட்டலை அடுத்து ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் பிரைம் பொருத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. பயணிகள் உடமைகள் மற்றும் ரயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரயில்களும் சோதனையிடப்படுகின்றன.
ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்களிலும் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரயில்களில் மர்ம பார்சல்கள் மற்றும் சூட்கேஸ்கள் எதுவும் இருந்தால் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ, ரயில்வே போலீசுக்கோ தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications