காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது: 6-8 மணிநேரம் மின்தடை அமல்- கடுப்பில் மக்கள்

தமிழகத்தில் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெல்லை மண்டலத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் கணிசமான அளவுக்கு மின்சாரம் உற்பத்தியானது. இதனால் அவ்வப்போது மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. இந்த மண்டலங்களில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் சராசரியாக 1,250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. ஒரு சில தினங்கள் இந்த அளவு குறையும்போது மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக இந்த காற்று சீசனில் ஒரே நாளில் 1,750 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தியானது. இந்த நிலையில் ஆடி மாதம் முடிய உள்ளதால் தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் குறைந்து வருகிறது.
கடந்த சில தினங்களாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. நெல்லை மண்டலத்தில் நேற்று முன்தினம் 1,211 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இந்த அளவு நேற்று திடீரென குறைந்தது. நேற்று காலை முதலே காற்று இல்லாததால் காற்றாலைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை மண்டலத்தில் இருந்து 1,050 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. இதன் காரணமாக நேற்று மீண்டும் கடுமையான மின்வெட்டு அமலுக்கு வந்தது. நகர் பகுதியில் காலை 3 மணிநேரமும், பகல் 3 மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. செங்கோட்டை பகுதியி்ல் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 12 மணி முதல் 2.30 வரையும், பின்னர் மீண்டும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் மின்தடை ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications