ஹைதராபாத்திலிருந்தும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறுகிறார்கள்

கடந்த சில நாட்களாக பெங்களூரிலிருந்து ஆயிரக்கணக்கான வட கிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறி வருகின்றனர். பல ஆயிரம் பேர் இதுவரை வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த இடப் பெயர்ச்சி ஹைதராபாத்துக்கும் பரவியுள்ளது.
மும்பையில் கடந்த சனிக்கிழமை வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பத்தைத் தொடர்ந்து ஹைதராபாத், விசாகப்பட்டனம் மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான வட கிழக்கு மாநிலத்தவர்கள் பீதியடைந்த நிலையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவர்கள் ஹைதராபாத் வந்து அங்கிருந்து கொல்கத்தா மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் ஊருக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.
இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆந்திராவை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் நாட்களில் மேலும் பலஆயிரம் பேர் வெளியேறக் கூடும் என்று தெரிகிறது.
இதுகுறித்து ஹைதராபாத் அஸ்ஸாமி சங்க முன்னாள் தலைவர் சரபேஸ்வர் சஹாரியா கூறுகையில், மும்பையில் நடந்த சம்பவம் எங்களை அச்சத்தில் தள்ளியுள்ளது. ஏதோ எங்களை தீவிரவாதிகள் போல பார்ப்பதாக நாங்கள் உணர்கிறோம். இந்த அச்ச உணர்வுடன் எங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்றார்.
கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் ஆங்காங்கு வட கிழக்கு மாநிலத்தவர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். 21 வயதான மிலால் சைக்கி என்ற வாட்ச்மேன் மாதப்பூரில் தாக்கப்பட்டார். அப்போது தாக்குதல் நடத்தியவர்கள், ஏன் இன்னும் அஸ்ஸாமுக்கு ஓடாமல் இங்கேயே இருக்கிறாய் என்று மிரட்டியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதான் அஸ்ஸாமியர்களையும், பிற வட கிழக்கு மாநிலத்தவர்களையும் பீதிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications