மூலிகை மருந்தில் கலப்படமா?: ராம்தேவ் ஆசிரமத்தில் சுகாதார துறையினர் ரெய்டு!
வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆதரவாளர்களுடன் கடந்த 9-ந்தேதி முதல் 6 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனையடுத்து பாராளுமன்றத்தை நோக்கி அவர் பேரணி நடத்தினார். அப்போது ராம்தேவையும், அவரது ஆதவாளர்களையும் போலீசார் கைது பின்னர் விடுதலை செய்தனர். எனினும் உண்ணாவிரத்தை முடித்து கொண்ட அவர் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். பாபா ராம்தேவ் வெளிநாடுகளுக்கு மூலிகை மருந்துகள் தயாரித்து அனுப்பி வருகிறார். இதில் கலப்படம் செய்வதாக அதிகாரிகளுக்கு வந்த புகார்களை அடுத்து இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
ஆனால் தன்மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருவதாக பாபா. ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக கூறிய ராம்தேவ், மத்திய அரசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.