வேளாங்கண்ணியிலிருந்து கள்ளத் தோணியில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 42 அகதிகள் சிக்கினர்
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து வேளாங்கண்ணி சென்று அங்கிருந்து கடல் வழியாக கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 42 அகதிகள், போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இலங்கை உள்நாட்டு போரின் போது, தமிழகத்திற்கு ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வந்தனர். இவர்களுக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து சில அகதிகள் தப்பி செல்ல முயற்சி செய்து வருவதாக, கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வண்டலூரில் கியூ பிராஞ்ச் போலீசார், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரப்பாக்கம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 வேன்களை தடுத்து நிறுத்திய போலீசார், சோதனை நடத்தினர். இதில் 26 ஆண்கள், 5 பெண்கள், 11 குழந்தைகள் என்று மொத்தம் 42 இலங்கை அகதிகள் இருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களை சேர்ந்த 42 பேரும், ஒரு ஏஜெண்டு மூலம் வண்டலூர் மிருக காட்சி சாலைக்கு வரவழைக்கப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்து 2 வேன்கள் மூலம் வேளாங்கண்ணிக்கு சென்று, அங்கிருந்து கடல் வழியாக கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 42 அகதிகளும், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து விசாரணைக்காக புழல் திறந்தவெளி அகதிகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மோசடி செய்த 5 தரகர்கள் கைது:
இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் வசூலித்த 5 தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.