ரஞ்சன் உடல் தகனம்.. ஸ்டாலின், நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி
சென்னை: சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூட நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவன் ரஞ்சனின் உடலுக்கு இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் ரஞ்சனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
ரஞ்சன் நேற்று காலை தனது பள்ளியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான். அவனது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து உடலை குடும்பத்தினர் ஆழ்வார்திருநகரில் உள்ள தங்களது வீட்டுக்குக் கொண்டு சென்றனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் வந்து ரஞ்சனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அப்போது பலரும் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இறந்த ரஞ்சனின் தாத்தா முன்னாள் திமுக எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ரஞ்சனின் உடல் போரூர் இடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications