கர்நாடகத்தில் வடகிழக்கு மாநிலத்தவருக்கு எதிரான எஸ்.எம்.எஸ். அனுப்பிய 8 பேர் கைது
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான எஸ்.எம்.எஸை பரப்பவிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக துணை முதல்வர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக தொடர்ந்தும் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அசாம் மாநில அமைச்சர்கள் சந்தன் பிரம்மா, நிலோமோனி சென் தெகா ஆகியோர் நேற்று கர்நாடக மாநில அரசுடன் ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் அசோக் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தியது, மிரட்டல் விடுத்தது மற்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பொய்யான எஸ்.எம்.எஸை பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநில மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
வடகிழக்கு மாநில மாணவர்கள் அதிகம் தங்கியிருக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களை ஒப்பிடுகையில் பெங்களூர் நகரைவிட்டு வெளியேறும் வடகிழக்கு மாநிலத்தவர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று கணிசமாக குறைந்திருக்கிறது. கர்நாடகத்தில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றார் அவர்.
அசாமில் இருந்து வந்திருந்த இரண்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலத்து மாணவர்கலுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கி வருவது திருப்தியளிக்கிறது. பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தவருக்கு உடனடியாக மாநில அரசு உதவியிருப்பது பாராட்டுக்குரியது. கர்நடாக மாநிலம் மிகவும் அழகிய மாநிலம். வடகிழக்கு மாநில மாணவர்கள் தங்களது கல்வியை தொடர்வதற்கு மிகவும் பாதுகாப்பான இடமும் கூட. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரையில் வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு 2-வது தாய்வீடு போன்றது என்றார்.
பின்னர் பெங்களூர் ரயில் நிலையம் சென்று வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல தயாராக இருந்த மாணவர்களை நேரில் சந்தித்து கர்நாடகம் மற்றும் அசாம் அமைச்சர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று வடகிழக்கு மாநிலங்கள் செல்ல இருந்த 500க்கும் மேற்பட்டோர் தங்களது பயணத்தை ரத்து செய்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications