நல்லிணக்கத்தைப் பேணி வளர்த்து தழைக்கச் செய்வோம்-வைகோ ரம்ஜான் வாழ்த்து

வைகோவின் வாழ்த்துச் செய்தி:
பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.
எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ‘ஈதுல்' பெருநாள் இந்நாள்.
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) சொன்ன அமுத மொழியைப் பின்பற்றி உருவமற்ற ஏக இறைவனை வணங்கியும், சகோதர சமயத்தாருடன் இணங்கியும் ஏழை எளியோர்க்கு வழங்கியும் வாழ்ந்து காட்டும் இவ்வினிய நன்னாளில் சமய ஒற்றுமை தழைக்கவும், சமய நல்லிணக்கம் செழிக்கவும், வாழையடி வாழையெனத் தமிழகத்தில் வளர்ந்தோங்கி வரும் நல்லிணக்கத்தைப் பேணி வளர்க்க சூளுரைத்து மதிமுக சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளை இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று வாழ்த்தியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications