'கிரானைட்' பி.ஆர்.பழனிச்சாமி மதுரையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றம்
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், திண்டுக்கல், கருர், மாவட்டங்களிலும், பி.ஆர்.பி நிறுவனத்திற்குச் சொந்தமாக பல்வேறு கிரானைட் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என்பதை கண்டறிந்தனர். சட்டவிரோதமாக கிரானைட் குவாரி நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஊழியர்கள் சில கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பி.ஆர். பழனிச்சாமி, துரை தயாநிதி ஆகியோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
அளவுக்கதிகமாக கிரானைட் வெட்டி எடுத்தது உட்பட 12 வழக்குகள் பி.ஆர்.பழனிச்சாமி மீது பதிவு செய்யப்பட்டன. வழக்கைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பி.ஆர்.பி நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி சனிக்கிழமையன்று மதுரையில் சரணடைந்தார். அவரை போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன், வரும் 31 ம் தேதிவரை மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பி.ஆர்.பழனிச்சாமிக்கு சிறையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வசதி இல்லாவிட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பழனிச்சாமியை போலீஸார் சிறையில் மதுரை சிறையில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார். நள்ளிரவு 12 மணி அளவில் மதுரை சிறையில் இருந்து பாளையங்கோட்டைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதிகாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை சிறையில் அவர்அடைக்கப்பட்டார் .
நவக்குடி கண்மாயில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்ததாக பழனிச்சாமி மற்றும் அவரது மகன்கள் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.