ஜப்பானில் பயங்கரம்... ஊறுகாய் சாப்பிட்ட 6 பேர் பலி!
டோக்கியோ: ஜப்பானில் சாதாரண ஊறுகாயை சாப்பிட்ட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. ஈ கோலை பாக்டீரியாவால் கெட்டுப் போன ஊறுகாய் அது என்று கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு ஜப்பானில் உள்ள ஹொக்கைடோவில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைகளில் பேக் செய்யப்பட்ட சீன நாட்டு முட்டைகோஸ் ஊறுகாய் பேக் செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. இதை வாங்கிச் சாப்பிட்டவர்கள்தான் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
10 நாட்களுக்கு முன்பே பிரச்சினை உருவாகி விட்டது. இந்த கெட்டுப் போன ஊறுகாயை சாப்பிட்டு இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனைகளில் தங்கியுள்ள முதியவர்கள்தான். இருப்பினும் சப்போரோ நகரில் கடந்த வாரம் 4 வயது சிறுமியும் இந்த கெட்டுப் போன ஊறுகாய்க்குப் பலியாகியுள்ளாள்.
இந்த சீனத்து முட்டைகோஸ் ஊறுகாயானது ஜப்பானில் மிகவும் பிரபலமான சைட் டிஷ் ஆகும்.ஆனால் இந்த ஊறுகாய் உயிர்ப்பலி வாங்கியுள்ளது ஜப்பானியர்களை அதிர வைத்துள்ளது. இதற்கு முன்பு இப்படி ஊறுகாய்க்கு மரணமடைந்த வரலாறு ஜப்பானில் இல்லை என்பதால் இந்த ஊறுகாயை தற்போது ஜப்பானியர்கள் எமனாக பார்க்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications