உயர் அதிகாரிகள் கொடுமை: 200 அடி செல்போன் டவரில் ஏறி 5 நாட்களாக போராடிய தமிழக ராணுவ வீரர் மீட்பு
டெல்லி: கடந்த 5 நாட்களாக சாப்பிடமால் டெல்லி ரயில் நிலையம் அருகே உள்ள 200 அடி செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே இறங்க மறுத்த தமிழக ராணுவ வீரர் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் டெல்லியில் பணியாற்றுபவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கே. முத்து(35). கடந்த 5 ஆண்டுகளில் தன்னை 5 முறை இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகள், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், விடுப்பு அளிக்க மறுத்ததாகவும் முத்து புகார் தெரிவித்தார். இந்த புகார்களை மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் தெரிவிக்க அனுமதி கோரி அவர் டெல்லி அஜ்மீரி கேட் பகுதியில் உள்ள 200 அடி செல்போன் கோபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு ஏறினார்.
இதையடுத்து ராணுவ அதிகாரிகள், போலீசார் வந்து அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டும் அவர் கீழே இறங்கவில்லை. வெள்ளிக்கிழமை முதல் சாப்பிடாமல் கோபுரத்தில் இருந்த முத்து நேற்று காலை மயங்கினார். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் கோபுரத்தின் மீது ஏறி அங்கு மயங்கிக் கிடந்த முத்துவை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
94 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு முத்து மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை செல்போன் கோபுரத்தில் ஏறிய பிறகு முத்து சில காகிதங்களை கீழே வீசியுள்ளார். அதில் தன்னை உயர் அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதால் ராணுவத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் கடந்த 8 மாதங்களாக தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியையும் தருமாறு வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications