நிலக்கரி சுரங்க ஊழல்.. சிபிஐ விசாரணை ஆரம்பம்: மாநில அரசுகளும் சிக்குகின்றன!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக விரைவில் பல்வேறு எப்ஐஆர்கள் (முதல் தகவல் அறிக்கைகள்) பதிவு செய்யப்படவுள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
நிலக்கரித் துறையின் செயலாளர் தலைமையில் அமைந்த பல்வேறு துறை அமைச்சகங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளை கொண்ட குழுதான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை செய்து வந்தது. இந்தக் குழுவில் 9 அமைச்சகங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள், நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களும் இடம் பெற்றிருந்தனர்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (Central vigilance commission) கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ முறைப்படி விசாரணையை துவக்கியுள்ளது.
2006-2009 காலக்கட்டத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை கவனித்து வந்த உயர் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணையையும் நடத்தி வருகிறது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஒதுக்கீடு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு முறைகேட்டில் தொடர்பு உள்ளவை எனக்கூறப்படும் 15 தனியார் நிறுவனங்களை சிபிஐ பட்டியலிட்டுள்ளது.
இதையடுத்து இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ பல வழக்குகளைப் பதிவு செய்யும் என தெரிய வந்துள்ளது. வழக்குப்பதிவு செய்த பின்னர்தான் கைது நடவடிக்கைகள் துவங்கும்.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மாநில அரசுகளின் அதிகாரிகளின் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வருகிறது. இதனால் நிலக்கரி ஊழல் விவகாரம் மத்திய அரசோடு நின்றுவிடாமல் பல மாநில அரசுகளின் முகத்திலும் கரியைப் பூச உள்ளது.












Click it and Unblock the Notifications