ராஜ்தாக்கரே பேரணியில் கலந்து கொண்ட ஏட்டு: கமிஷ்னருக்கு எதிராக பேச்சு!
மும்பையில் அசாம் கலவரத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது வெடித்த வன்முறைக்கு பொறுப்பேற்று மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் மற்றும் பட்நாயக் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி மகராஷ்டிரா நவநிர்மான் சேனா நேற்று தடையை மீறி பேரணியும் போராட்டமும் நடத்தியது.
இப்பேரணியின் போது மேடையில் இருந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவரான ராஜ்தாக்கரேயை போலீஸ் சீரூடையில் இருந்த கான்ஸ்டபிள் பிரமோத் தவே நேரில் சந்தித்து மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் நிற்காமல் காவல்துறை ஆணையாளர் அரூப் பட்நாயக்கை கடுமையாக விமர்சித்தும் பேசியிருக்கிறார்.
கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதியன்று மத்திய தொழில்பாதுகாப்புப் படையினரால் தாம் தாக்கப்பட்டபோது மத்திய படையினருக்கு எதிராக காவல்துறை ஆணையர் அரூப் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மறுத்துவிட்டார் என்பதுடன் தம்மை கிண்டல் செய்ததாகவும் தவே குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் எம்.எல்.ஏ. பால நந்த்கோன்கர், கான்ஸ்டபிள் தவேயின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்கள் தலைவர் ராஜ்தாக்கரேயின் உரையின் தாக்கத்தால் அவர் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் மத்திய தொழில்பாதுகாப்பு படையால் பாதிக்கப்பட்ட தவேக்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.