ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு ஷாக்.. எங்களால சமாளிக்க முடியல.. RBI அதிகாரிகள் சொன்ன முக்கிய விஷயம்!
சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவையும் எடுக்கலாம் என ஆர்பிஐ உயர் அதிகாரிகள் ப்ளூம்பெர்க்-க்கு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு முதலில் கேஸ் விலையை உயர்த்தமாட்டோம் என அறிவித்தது, பின்பு உயர்த்தியது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தமாட்டோம் என அறிவித்தது, பின்பு உயர்த்தியது. தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவோ, வரி விதிக்கவோ எவ்விதமான திட்டமும் இல்லை என அறிவித்தது, பின்பு உயர்த்தியது. தற்போது ப்ளூம்பெர்க் செய்திக்குப் பின்பு வட்டி விகிதம் உயர்த்த திட்டம் இல்லை எனக் கூறும், ஆனால் ரூபாய் மதிப்பு குறைக்க வழி தெரியாத காரணத்தால் உயர்த்தப்பட்டு உள்ளது என விளக்கம் கொடுக்கும்.

இந்த நிலையில் மக்கள் அனைவரும் செய்ய வேண்டியது ஓன்று மட்டுமே அனைத்து எல்லைக்கும் தயாராக இருக்க வேண்டியது மட்டுமே. தற்போது ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரெப்போ விகிதம் அடிப்படையிலான அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதில் முக்கியமான பாதிக்கப்படப் போவது ஹோம் லோன் வாங்கியவர்கள் தான். காரணம் ஹோம் லோன் அனைத்தும் ப்ளோட்டிங் வட்டி விகித முறையில் இணைக்கப்பட்டு உள்ளது.
மே 20-ம் தேதி ரூபாய் ஒரு டாலருக்கு 96.95 என்ற புதிய வரலாற்றுச் சரிவை எட்டியது. பின்னர் வர்த்தகம் நாள் முடிவில் 96.86-ல் முடிவடைந்தது. மே 21 அன்று காலை வர்த்தகத்தில் ரூபாய் சற்று மீண்டு 96.45-க்கு வந்துள்ளது. இருப்பினும், ரூபாயின் பலவீனம் தொடர்ந்து கவலை அளித்து வருகிறது.
இந்த நிலையில் ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் உயர் அதிகாரிகள் உடன் பல உள் நிர்வாக ஆலோசனை கூட்டத்தை கடந்த 2 வாரங்களாக நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரவு 8 மணி அறிவிப்பிலோ அல்லது காலை 10 மணி அறிவிப்பிலோ வட்டி விகித உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வரலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டாலரின் வலிமை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு பதற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பை தலைகீழாகப் புரட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக, ஈரான் தொடர்பான போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.
ரூபாய் மதிப்பு குறையும் போது இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும். இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயமும் உள்ளது. இதனால் சாமானிய மக்களின் அன்றாட செலவு அதிகரிக்கும் நிலை உருவாகலாம்.
ஆர்பிஐ தற்போது ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது. வட்டி விகிதத்தை உயர்த்தினால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இதனால் ரூபாய் மதிப்பு சரிவு குறையும். ஆனால், வட்டி விகிதம் உயர்ந்தால் தனிநபர் மற்றும் தொழில் கடன்களின் மாதாந்திரத் தவணை (EMI) அதிகரிக்கும். எனவே, இந்த முடிவு மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் ஆர்பிஐ கவனமாகச் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய நிலையில் ஆர்பிஐ நாட்டு மக்களின் நலனைக் கவனிக்குமா அல்லது அன்னிய செலாவணியை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுமா என்பது தான் முக்கியமான கேள்வி.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறியதால் இன்று ரூபாய் சற்று மீண்டுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தால் எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.














Click it and Unblock the Notifications