கூடங்குளம் மின்சாரம் தமிழகத்துக்கே என்று கோரும் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பாராட்டு: கி.வீரமணி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டின் மின்தேவைக்கே மத்திய அரசு முன்னுரிமை அளிக்க முன் வரவேண்டும் என்ற தமிழக முதல்வரின் வேண்டுகோள் மிக நியாயமான ஒன்றாகும். இதனை பல மாதங்களுக்கு முன்பே நாம் வரவேற்று எழுதியிருந்தோம்.
இப்போது முதல்வர் நமது பிரதமருக்கு மீண்டும் நினைவூட்டி மற்றொரு கடித வேண்டுகோளும் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டை மின் தட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் காப்பாற்ற, இந்த உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கேட்பது உரிமையின் அடிப்பையில் மட்டுமல்ல, நியாயத்தின் அடிப்படையிலும் தேவையான ஒன்றாகும்.
இதனை ஆதரித்து அத்துணைப் பேரும் அரசியல் மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகளையும் கடந்து, தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுப் பிரச்சினையாக இதனை எண்ணி ஒரே குரலாகக் கொடுக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியும் இதனை ஏற்றுக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டின் நலனைப் பொறுத்த பொதுப் பிரச்சினைகள், காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை போன்றவற்றில் தமிழ்நாட்டிலுள்ள அத்துணை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே அணியில் திரளத் தயங்கினாலும் ஒரே குரலே, சுருதி பேதமின்றி உரிமை முழக்கமாக எழுப்பக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இத்தகைய பொதுநோக்கு பெருகட்டும், உரிமைகளை வற்புறுத்தி மக்களுக்கு, வாழ்வளித்திட அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் உறுதியேற்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications