TCS: 25 நாட்கள் தேடுதல் வேட்டை.. பெண் ஐடி ஊழியர்கள் பாலியல் தொல்லைக்கு துணை போன நிதா கான் கைது!
மும்பை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25 நாட்களாக தலைமறைவாக இருந்த நிதா கான், சத்ரபதி சம்பாஜி நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, கராணம் இந்தியாவில் அதிகளவில் பெண்கள் பணியாற்றும் முக்கிய துறையாக விளங்கும் ஐடி துறையில் பாலியல் தொல்லை, திருமணம் செய்வதாக கூறி உடலுறவு, மதமாற்றம், வெளிநாட்டில் வேலை என நாடு கடத்தல் என பல குற்றச்சாட்டுகள் டிசிஎஸ் நாசிக் பிபிஓ அலுவலகத்தை சுற்றியுள்ளது.

நிதா கான் எங்கே, எப்படி கைது செய்யப்பட்டார்?
நிதா கான் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர், நரேகான் பகுதியில் உள்ள கைசர் காலனியில் ஒரு வாடகை அப்பார்ட்மென்ட்-ல் தலைமறைவாக இருந்தார். இந்த இடத்தில் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் நான்கு நாட்களாக மறைந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பிளாட் அவருக்கு தற்காலிகமாகத் தங்குவதற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நாசிக் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), சம்பாஜி நகர் கிரைம் பிராஞ்ச் மற்றும் உள்ளூர் போலீஸ் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், இரண்டு நாட்களாக சாதாரண உடையில் ரகசியமாக கண்காணித்த பிறகு அவரை கைது செய்தனர்.
இந்தக் கைது மூலம் வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதா கான் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை என்பதால், போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.
டிசிஎஸ் பிபிஓ நாசிக்
கடந்த மாதம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள், சக ஊழியர்கள் மீது பாலியல் துன்புறுத்தல், மன உளைச்சல் மற்றும் மத மாற்ற முயற்சி என்ற குற்றச்சாட்டுகளை போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களைத் தொடர்ந்து போலீசார் பல தனிப்படைகளை அமைத்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த வழக்கில் நிதா கான் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்பட்டதால் அவரைத் தேடும் பணி தீவிரமடைந்தது.
நிதா கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
நிதா கான் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்கார வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவியதாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், புகார் அளித்த ஒரு ஊழியரை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சி செய்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதைத் தடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு
நிதா கான் நாசிக் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள், விசாரணைக்கு காவல்துறை விசாரணை அவசியம் என்றும், டிஜிட்டல் ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் நாசிக்கிற்கு வெளியில் இந்த வழக்கு தொடர்புடைய காரணத்தால் நிதா கான்-க்கு ஜாமீன் வழங்க முடியாது நீதிபதி தெரிவித்தார். இதனால் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது கட்டாயமானது.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை
நிதா கானின் கணவரை போலீசார் விசாரித்த பிறகு அவர் மறைந்திருக்கக் கூடிய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அந்த இடங்கள் பூட்டப்பட்டிருந்தன. அவரது உறவினர்களின் மொபைல் போன்களும் செயலிழக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில் 25 நாட்கள் தலைமறைவாக இருந்த நிதா கான் இறுதியில் சத்ரபதி சம்பாஜி நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கறிஞரின் வாதம்
நிதா கானின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில், அவர் 2.5 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும், மும்பையில் தங்கியிருப்பதாகவும், கைதிலிருந்து பாதுகாப்பு தேவை என்றும் மனு கொடுத்தார். மேலும் மகாராஷ்டிராவில் தனிப்பட்ட மதமாற்றச் சட்டம் ஏதுமில்லை என்றும், வலுக்கட்டாய மதமாற்றம் என்ற குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தும் வாதம் முன்வைக்கப்பட்டது.















Click it and Unblock the Notifications