இலங்கையில் நடந்த தடகள போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை அள்ளிய 86 வயது தமிழக முதியவர்

முதியவர்களுக்கான சர்வதேச தடகள போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்பில் அண்மையில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட திருத்தணியைச் சேர்ந்த பி. நடேச ரெட்டி(86) 85 முதல் 89 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று சங்கிலி குண்டு எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றார்.
அங்கு பதக்கங்கள் வென்று நாடு திரும்பிய அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான முதியவர்கள் தடகள போட்டியில் கலந்து கொண்டார். அங்கும் குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் சங்கிலி குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார்.
நடேச ரெட்டி கடந்த 15 ஆண்டுகளாக் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்து கொண்டு இதுவரை 65 பதக்கங்களை வென்றுள்ளார். அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிறந்த விளையாட்டு வீரர் விருதை வழங்கியது.
தனது உடலில் தெம்பு இருக்கும் வரை விளையாடப் போவதாக நடேச ரெட்டி தெரிவித்தார். அவர் தற்போது திருத்தணியில் உள்ள தளபதி கே. வினாயகம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கைப்பந்து பயிற்சியாளராக உள்ளார். வரும் நவம்பர் மாதம் சீனாவில் ஆசிய அளவிலான முதியோர் தடகள போட்டி நடக்கிறது. அதிலும் பங்கேற் அவர் முயற்சித்து வருகிறார்.
இலங்கையில் தான் வென்ற பதக்கங்களை அவர் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனிடம் நேற்று காண்பித்தார். இந்த வயதிலும் சிறப்பாக விளையாடி 4 தங்கப் பதக்கங்கள் வென்று வந்த அவரை சிவந்தி ஆதித்தன் வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications