5 வயது சிறுவனை அடித்து, உதைத்து பிச்சை எடுக்க வைத்த சித்தப்பா
நாகர்கோவில்: சிறுவனை சொந்த சித்தப்பாவே பிச்சை எடுக்க வைத்த கொடூரம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் 5 வயது சிறுவன் ஒருவனை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீசார் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த பெரியவரின் அடியை தாங்க முடியாமல் சிறுவன் மயங்கி விழுந்தான். இதைப் பார்த்த போலீசார் சிறுவனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அந்த வடமாநிலத்தவரை போலீசார் வடசேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் சிறுவனை கொடுமைப்படுத்தியவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்த மாகிலால் என்பதும், சிறுவன் அவரின் அண்ணன் மகன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவன் அவனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டான்.