புனேயில் ஒரேநாளில் 456 பேர் கண் தானம்
புனே : புனேயில் இளைஞர் பொழுதுபோக்கு மன்றத்தைச் சேர்ந்தவர் 456 பேர் தங்களின் கண்களை தானமாக தர முன்வந்துள்ளனர். இளைஞர்கள் என்றாலே பொழுதுபோக்காக மட்டுமே இருப்பார்கள் என்ற நிலையை இந்த சம்பவம் மாற்றியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் சூரத்வாலரி இளைஞர் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 75 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த 75 பேரின் குடும்பங்களில் மொத்தம் 456 பேர் உள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று புனேயில் உள்ள ஆச்சார்யா அனன்ட்ரிசிஜி ரத்ததான வங்கியில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது. இதில் துணை முதல்வர் அஜித்பவார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவின்போது சூரத்வாலா கிளப்பை சேர்ந்த 456 குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களது கண்களை தானம் செய்ய முன்வந்தனர். இதற்கான ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சூரத்வாலா இளைஞர் கிளப்பைச் சேர்ந்த பரேஷ், எங்கள் கிளப்பில் உள்ள உறுப்பினர்களிடம் கடந்த 6 மாத காலமாக கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். நாம் இறந்த பிறகு நமது கண்களை பார்வையற்ற யாராவது ஒருவருக்கு பொருத்தினால் அவர்கள் பார்வை பெறுவார்கள். எனவே கண்களை அனைவரும் தானம் செய்வோம் என்று தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டோம். தொடக்கத்தில் சிலர் கண்களை தானம் செய்ய தயக்கம் காட்டினார்கள். தற்போது அனைவரும் மன தார தங்களை கண்களை தானம் செய்ய முன் வந்துள்ளனர் என்றார். இதேபோல் நாடு முழுவதும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மேற் கொண்டால் பார்வையற்றோரின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விடலாம் என்றும் அவர் கூறினார்.
இந்த இளைஞர்களின் செயலுக்கு அனைவரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.