குஜராத்தி 'டிவி 9' தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காங்கிரசார் பங்கேற்க தடை- மோடி கண்டனம்
காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினர், "டிவி 9" நிறுவனத்தின் குஜராத்தி மொழி சேனல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி அண்மையில் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் "டிவி 9 குஜராத்தி" தொலைக்காட்சி நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காங்கிரசார் பங்கேற்கக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. டிவி 9 தொலைக்காட்சியில் 80 விழுக்காடு பாஜக அரசியல் நிகழ்வுகளும் குஜராத் அரசின் ஆதரவு நிகழ்ச்சிகளுமே ஒளிபரப்பப்படுகின்றன. 20 விழுக்காடு நிகழ்ச்சிகள்தான் காங்கிரஸ் சார்ந்ததாக இருக்கிறது என்பது அக்கட்சியின் குற்றச்சாட்டு. இத்துடன் காங்கிரஸ் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் டிவி 9 தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் எவரும் வரக்கூடாது என்றும் தடை விதித்துவிட்டது காங்கிரஸ். அப்படி யாரேனும் வந்தால் டிவி 9 செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இதனை வன்மையாகக் கண்டித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் இது என்று கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும்கூட இந்த விவகாரத்தில் தலையிட்டு காங்கிரஸ் கட்சியிடமிருந்து தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications