'புரட்சி' என்ற வார்த்தை அனைவருக்கும் பொருந்தி விடாது: கருணாநிதி
திக தலைவர் கி. வீரமணி விடுதலை நாளேட்டின் ஆசிரியராக பணியாற்றத் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி 50வது ஆண்டு நிறைவு விழா கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது,
சமுதாய சீரழிவுகளை எதிர்தது தொடர்ந்து குரல் கொடுத்து வரும் புரட்சிகரமான ஏடு தான் விடுதலை. புரட்சி என்ற வார்த்தை அனைவருக்கும் பொருந்திவிடாது. புரட்சி கவிஞர் என்றால் அது பாரதிதாசன் தான். அது வேறு யாருக்கும் பொருந்தாது. திராவிட இயக்கமானது பல அடக்குமுறைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றைத் தாண்டி வளர்ந்துள்ளது.
தந்தை பெரியார் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் யாரோ ஒருவன் அவர் மீது செருப்பை வீசினான். அதற்கு பெரியார் மற்றொரு செருப்பையும் தேடுங்கள், 2 செருப்பும் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா என்றார். அந்த பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது. இத்தனையையும் தாங்கிக் கொண்டு தான் அவர் திராவிட இயக்கம் என்னும் பேரியக்கத்தை வளர்த்தார். பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளை காத்து வருபவர் கி. வீரமணி என்றார்.