'செங்க்ஸ்' வகித்த பதவி அமைச்சர் பழனியப்பனுக்கு, அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் வளர்மதி
அதே போல அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்த சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி நீக்கப்பட்டு, அதிமுக இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சங்மாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கடந்த மாதம் அதிமுக தலைமை கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தவறுகள் செய்யும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து அன்று மாலையே அமைச்சர் பதவியில் இருந்தும் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
இந் நிலையில் தலைமை நிலையச் செயலாளராக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை நியமித்துள்ளார் ஜெயலலிதா.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பா.வளர்மதி, கோவை மாநகர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் ஏ.கே.செல்வராஜ், தர்மபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.பழனியப்பன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பனும், அதிமுக விவசாய பிரிவுச் செயலாளர் பொறுப்பில் முன்னாள் வாரியத் தலைவர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த கு.தங்கமுத்துவும்,
அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் பொறுப்பில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதியும், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜும் நியமிக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.