நெல்லையில் ஆசிரியை அடித்ததால் தூக்கில் தொங்கிய 10ம் வகுப்பு மாணவன்
நெல்லை: வீரவநல்லூரில் பள்ளி ஆசிரியை அடித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாணவரின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் நயினார்குளத்தைச் சேர்ந்த தொழிலாளி வெள்ளைபாண்டி மகன் சுஜீத்குமார். அவர் வீரவநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளியில் பூந்தொட்டி ஒன்று உடைந்து கிடந்தது தொடர்பாக சுஜீத் குமாருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பூந்தொட்டியை நான் உடைக்கவில்லை என்று அபராதம் செலுத்த மாணவர் மறுத்து வந்தார். இதையடுத்து அவரை ஒரு ஆசிரியை அடித்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற அவர் 11 மணிக்கு வீடு திரும்பினார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சுஜீத் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என 300 பேர் அவரது உடலுடன் பாபநாசம்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரோகினி ராமதாஸ், டி.எஸ்.பி.க்கள் அம்பை முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி பாலசுப்பிரமணியன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி உள்பட பலர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மாணவரின் சித்தப்பா அம்பேத்கார் கொடுத்த புகாரின்பேரில் பள்ளி நிர்வாகிகள் மங்கையர்கரசி, ஷியாம், தலைமை ஆசிரியை ஜாய்ஸ்ராணி, வகுப்பு ஆசிரியை விமலாபாய்,பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முகமது இலியாஸ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டல், மற்றும் தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஜாய்ஸ்ராணி, விமலாபாய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.