சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? கி.வீரமணி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இம்மாதம் 19ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.
சென்னை-தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான குரல் கிளம்பியதையடுத்து தாம்பரத்திலிருந்து பெங்களூருக்குப் பயிற்சி அளிப்பதை மாற்றினர். அதுவே ஒரு தவறான முடிவாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த-கொன்று குவிக்க இருக்கிற ஒரு ராணுவத்துக்குப் பயிற்சியைத் தாம்பரத்தில் அளித்தால் என்ன? பெங்களூரில் அளித்தால் என்ன? இது ஓர் ஏமாற்று வேலை தான்.
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல மீண்டும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?
தமிழ்நாடு அரசின் சார்பிலும், முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தும், மத்திய அரசு இப்படி நடந்து கொள்வது தமிழர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகும்.
12.8.2012 அன்று சென்னையில் ‘டெசோ' சார்பில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய பயிற்சியை அளிக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஈழத் தமிழராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி அவர்களை அலட்சியப்படுத்தும் தன்மையில் நடந்து கொள்வதாகவே கருதுகிறோம்.
அந்த நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சனையிலும் மத்திய அரசு பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்பதும் வெளிப்படை.
சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? எந்தக் காரணத்துக்காக அப்படி நடந்து கொண்டாலும் சரி, ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இலங்கைப் பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளுக்கு துணைபோகும் வகையில் இந்திய அரசு நடந்து கொண்டு வருவது உலகத் தமிழர்கள் மத்தியிலே புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்க வழிவகுக்கக் கூடியதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, கழகத் தோழர்களே, வரும் 31ம் தேதியன்று காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைளை மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்து போராட்டம் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications