உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரியை திட்டித் தீர்த்த உ.பி. அமைச்சர் ஆலம் கான்
லக்னோ: உத்தர பிரதேச மாநில நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஆலம் கான் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை பிற அதிகாரிகள் முன்னிலையில் திட்டித் தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநில நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஆலம் கான் உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் கூட்டினார். கூட்டம் நடக்கும் அறைக்கு வந்த அவர் அங்கு நகர்ப்புற மேம்பாட்டு துறையின் தலைமை செயலாளர் பிரவீன் குமார் மற்றும் செயலாளர் சுஜித் சதுர்வேதி ஆகியோர் இல்லாததைக் கண்டவுடன் ஆத்திரம் அடைந்தார்.
அவர்கள் இருவரும் எங்கே என்று சிறப்பு செயலாளர் விஷ்ணு ஸ்வரூப் மிஸ்ராவிடம் கேட்டார். அதற்கு மிஸ்ரா, அவர்கள் இருவரும் வேறு ஒரு முக்கிய வேலையாக சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட ஆலம் கானுக்கு மேலும் கோபம் வந்தது. அத்தனை அதிகாரிகளுக்கு முன்பு சிறப்பு செயலாளரைப் பார்த்து வாயை மூடுங்கள், மரியாதை தெரியாவதவராக இருக்கிறீர்களே என்று திட்டித் தீர்த்துவிட்டு கூட்டத்தை ரத்து செய்து அந்த அறையைவிட்டு வெளியேறினார்.
கூட்டத்திற்கு வராத இரு அதிகாரிகளும் தன்னிடம் தெரிவிக்காமல் சென்றதால் தான் அமைச்சர் ஆத்திரம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் தெருக்கள் குப்பையாக கிடப்பதைப் பார்த்த ஆலம் கான் ஆத்திரமடைந்து நகராட்சி கமிஷனர் என்.பி. சிங்கை சஸபெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆனால் அவரது உத்தரவை முதல்வர் அகிலேஷ் யாதவ் ஏறறுக்கொள்ளவில்லை. அமைச்சர் கூட்டியிருந்த உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்கு என்.பி. சிங்கும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications