சோனியா 'பவரால்' மின்வெட்டில்லா மாவட்டங்களான ரேபரேலி, அமேதி!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியும், அவரது மகன் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளன. அந்த 2 தொகுதிகளிலும் மின்தடை பிரச்சனை இருந்தது. இதையடுத்து சோனியா கடந்த செவ்வாய்க்கிழமை லோக்சபாவில் அமர்ந்திருந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் இருக்கைக்கு சென்று அவரிடம் ரேபரேலி மாவட்டத்தில் மின்தடை பிரச்சனை குறித்து ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து முலாயம் தனது மகனும் உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு போன் செய்து சோனியா மற்றும் ராகுலின் தொகுதிகளில் 24 மணிநேரமும் மின்வினியோகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுமாறு கூறினார். இதைத் தொடர்ந்து ரேபரேலி மற்றும் அமேதி மாவட்டங்கள் மின்தடையில்லா விவிஐபி பட்டியலில் சேர்க்கப்பட்டது. அந்த 2 மாவட்டங்களிலும் மின்தடையே ஏற்படக் கூடாது என்று மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முலாயம் சிங் யாதவின் தொகுயான மெயின்புரி, அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவின் தொகுதி கன்னௌஜ், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆலம் கானின் தொகுதி ராம்பூர் மற்றும் யாதவ் குடும்பத்தாரின் சொந்த மாவட்டமான எடாவா ஆகிய மாவட்டங்கள் இதுவரை மின்தடையில்லா மாவட்டங்களாக இருந்தன. தற்போது இந்த பட்டியலில் ரேபரேலி மற்றும் அமேதி மாவட்டங்கள் சேர்ந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் மின் பிரச்சனை உள்ளது. நகர்ப்புறங்களில் தினமும் 4 மணிநேரம் வரையும், கிராமங்களில் 8 மணிநேரம் வரையும் மின்வெட்டு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.