கிரானைட் முறைகேட்டுக்கு உடந்தை: 10 அதிகாரிகளுக்கு காவல் துறை சம்மன்
மதுரை: கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உதவி செய்ததாக 10 அதிகாரிகளுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கிரானைட் முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரிகளின் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியாக இருந்த அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக 10 அதிகாரிகளுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் 6 ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அடக்கம். இதற்கிடையே கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட திருவாதவூர் சிந்து கிரானைட் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. சண்முகப்பிரியா, மேலூர் தாசில்தார் வசந்தா ஜுலியட், வெடிகுண்டு நிபுணர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமுருகேசன், மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசாருடன் இன்று சிந்து கிரானைட்டுக்கு சொந்தமான வெடி பொருள் கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு அட்டை பெட்டி, அட்டை பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர கழிப்பறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 20 அட்டை பெட்டி வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. பின்னர் அவை ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications