நெல்லையில் பிள்ளைகளுக்கு செலவு வைக்கக் கூடாதென்று பெற்றோர் தற்கொலை
நெல்லை: ஆழ்வார்குறிச்சியில் நோய் கொடுமையால் ஏட்டு ஒருவரின் பெற்றோர் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சிவந்தியப்பர் தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சிவசுப்பிரமணியன். அவரது மனைவி பிச்சம்மாள். அவர்களுக்கு 7 மகன்கள், 1 மகள் உள்ளனர். மூத்த மகன் கெங்கமுத்து பாளையங்கோட்டையில் ஏட்டாக உள்ளார். மற்றொரு மகன் தனியார் நிறுவனத்திலும், எஞ்சிய 5 மகன்கள் தந்தைக்கு உதவியாக விவசாயமும் செய்து வருகின்றனர். ஒரு மகனை தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் சிவசுப்பிரமணியனும், பிச்சம்மாளும் வலிப்பு மற்றும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தனர். பல மருத்துவமனைகளில் காண்பித்தும் நோய் குணம் ஆகாததால் இருவரும் விரக்தி அடைந்தனர்.
தங்களின் மருத்துவ செலவுக்காக மகன்கள் அதிகமாக செலவழிக்க வேண்டியது உள்ளதே என்று கவலை அடைந்த இருவரும் நேற்று முன்தினம் மதியம் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருவரும் மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.