ஜியோன் பள்ளி தாளாளர் விஜயன், ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன்

மாணவி ஸ்ருதி, கடந்த மாதம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே பள்ளி பேருந்தில் இருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்து இறந்து போனாள். இதையடுத்து பொதுமக்கள் அந்தப் பள்ளிப் பேருந்தை தீவைத்துக் கொளுத்தினர்.
இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பள்ளித் தாளாளர் விஜயன், அவரது தம்பிகள் பால்ராஜ், ரவி, டிரைவர் சீமான், ஆர்டிஓ அலுவலக அதிகாரி உள்ளிட்டோர் கைதானார்கள்.
இவர்களில் விஜயனின் ஜாமீன் மனு மட்டும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. கடைசியாக சென்னை உயர்நீதிமன்றமும் விஜயனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.
விஜயனின் சகோதரர் பால்ராஜ், பஸ் டிரைவர் சீமான், பஸ் பராமரிப்பாளரும், விஜயனின் இன்னொரு தம்பியுமான ரவி ஆகியோருக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து விஜயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக்கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
பள்ளி தாளாளர் விஜயன், மாணவி ஸ்ருதியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் மோட்டார் ஆய்வாளர் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இருவரும் திருச்சியில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேப்பியாருக்கும் ஜாமீன்
இதேபோல ஜேப்பியார் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மைதானம் கட்டும்போது கட்டடம் இடிந்து விழுந்ததில், 10 பேர் உயிரிழந்த வழக்கில், ஜேப்பியாருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கல்லூரி அதிபர் ஜேப்பியாரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் அளித்தார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, ஜேப்பியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவிலில் 4 வாரங்கள் தங்கி இருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications